Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 29 ஜூன் (ஹி.ச.)
மேற்கு வங்க முதலமைச்சர் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு, தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான பொது சிவில் சட்ட மசோதாவை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது.
சட்டத்துறை பொறுப்பையும் வகித்து வரும் முதலமைச்சர் சுவேந்து அதிகாரி, அரசின் சார்பில் இந்த மசோதாவை அவையில் அறிமுகப்படுத்தினார்.
திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு, ஜீவனாம்சம் உள்ளிட்ட தனிநபர் சிவில் சட்டங்களுக்கு, மத வேறுபாடின்றி அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்ட நடைமுறையை கொண்டு வருவதே இந்த மசோதாவின் முக்கிய நோக்கமாகும்.
அதே நேரத்தில், அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாப்பு பெறும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) சமூகங்களுக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் சுவேந்து அதிகாரி,
அனைத்து குடிமக்களுக்கும் சமமான உரிமையையும், பாலின நீதியையும் உறுதி செய்வதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை இது.
அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் கொள்கைகளுக்கு ஏற்ப இந்த சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று தெரிவித்தார்.
மசோதா தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சட்டப்பேரவையில் ஆளும் பாஜக உறுப்பினர்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களும் இடையே கடும் விவாதம் ஏற்பட்டது.
இந்த மசோதா சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிய நிலையில், அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற அரசியலமைப்புச் சிந்தனையை நடைமுறைப்படுத்தும் முயற்சியே இது என பாஜக விளக்கம் அளித்தது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P