Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 03 ஜூன் (ஹி.ச.)
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் அடுத்த கோளிவாக்கம் பகுதியில் திமுக சார்பில் கொடிக்கம்பம் நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திமுக நிர்வாகி ராஜேந்திரன் உள்ளிட்டோர் இரும்பாலான கொடிக்கம்பத்தை நட முயன்றனர்.
அந்த கொடிக்கம்பம் எதிர்பாராதவிதமாக அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் மின்சாரம் பாய்ந்து ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவருடன் இருந்த குப்பன், காளி ஆகிய இருவரும் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர், படுகாயமடைந்த இருவரையும் மீட்டு உடனடியாக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொடிக்கம்பம் அமைக்கும் பணிகளின்போது மின்கம்பிகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் கட்சியினர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b