Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதி வாக்காளர் சக்திவேல் பெருமாள் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சட்டமன்றத் தேர்தலின்போது எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது சொத்துகள் மற்றும் வருமானம் தொடர்பான அனைத்து விவரங்களும் முழுமையாக வெளிப்படுத்தப்படவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
இதுகுறித்து வருமான வரித்துறை மூலம் விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது,
வருமான வரித்துறை தரப்பில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டது. தேர்தல் வேட்புமனுவில் தாக்கல் செய்யப்படும் சொத்து விவரங்கள் தொடர்பாக எழும் ஆட்சேபனைகள் மற்றும் சர்ச்சைகள் தேர்தல் சட்டங்களின் கீழ் தீர்வு காணப்பட வேண்டியவை என்றும், அதற்காக தேர்தல் மனு (Election Petition) தாக்கல் செய்வதே சரியான சட்ட நடைமுறை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இதேபோன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு நீதிமன்றங்கள் விரிவான உத்தரவுகளை வழங்கியுள்ளதாகவும், தேர்தல் முடிவுகளை அல்லது வேட்புமனுவில் அளிக்கப்பட்ட தகவல்களை நேரடியாக வருமான வரித்துறை விசாரணைக்கு உட்படுத்தக் கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களுக்கு சட்டரீதியான வரம்புகள் இருப்பதாகவும் வருமான வரித்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
வழக்கின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த நீதிமன்றம், மனுதாரர் கோரியுள்ள நிவாரணத்தை இந்த வழக்கின் மூலம் வழங்க முடியாது என்றும், தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் மனு தாக்கல் செய்வதே உரிய சட்ட வழிமுறை என்றும் கருத்து தெரிவித்தது.
இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பு மூலம், வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைக்கப்பட்டதாகக் கூறி வருமான வரித்துறை விசாரணை கோரிய முயற்சிக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
அதே வேளையில், தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்கள் அளிக்கப்பட்டதாக யாரேனும் கருதினால், அதற்கான தீர்வை தேர்தல் சட்டங்களின் கீழ் தேர்தல் மனு மூலம் மட்டுமே நாட முடியும் என்பதையும் நீதிமன்றம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்த உத்தரவு அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், தேர்தல் தொடர்பான விவகாரங்களில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து முக்கிய வழிகாட்டுதலாகவும் பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / P YUVARAJ