Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 03 ஜூன் (ஹி.ச)
ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மற்றும் திருக்கழுகுன்றம் வட்டங்களில் கோவளம் உப வடிநிலப்பகுதிகளில் ரூ.342.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய குடிநீர் நீர்த்தேக்கத் திட்டப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
சென்னையின் எதிர்கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கியத் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நீர்த்தேக்கம் மூலம் நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீரை சென்னை மாநகருக்கு வழங்க முடியும். திட்டத்தின் ஒரு பகுதியாக 34 கிலோமீட்டர் நீளத்திற்கு மண் கரை அமைத்தல் மற்றும் வெள்ளநீரை முறைப்படுத்துவதற்கான நீர் ஒழுங்கிகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது வரை திட்டப் பணிகளில் சுமார் 15 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பணிகளின் முன்னேற்றம், தரம் மற்றும் காலக்கெடு தொடர்பாக அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பணிகளின் தரத்தில் எந்தவித சமரசமும் இன்றி, நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் திட்டத்தை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் என். ஆனந்த் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் உடனிருந்தனர்.
Hindusthan Samachar / P YUVARAJ