Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 03 ஜூன் (ஹி.ச.)
சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி காவல் நிலையம் அருகே உள்ள ரயில்வே மேம்பால சாலையில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு வந்ததில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிக்காக பயிற்சி அளிக்கப்பட்டு வந்த காளை மாடு, திடீரென இளைஞர்களின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பித்து பிரதான சாலைக்கு ஓடியது. அப்போது சாலையை கடக்க காத்திருந்த முதியவர் ஒருவரை காளை கொம்பால் முட்டி தூக்கி எறிந்தது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
மேலும், அருகில் சென்ற பெண் ஒருவரையும் காளை தாக்கியதில் அவர் காயமடைந்தார். காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், காளை மாடு முதியவரை முட்டி தூக்கி எறியும் சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam