Enter your Email Address to subscribe to our newsletters

தென்காசி, 03 ஜூன் (ஹி.ச.)
தென்காசி மாவட்டத்தின் 7-வது ஆட்சியராக ரஞ்ஜீத் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அவருக்கு முறைப்படி முந்தைய ஆட்சியர் கமல் கிஷோர் பொறுப்புகளை வழங்கிய நிலையில், தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித் சிங் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்பொழுது அவர் கூறும் போது,
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரச்சினைகள் குறித்து முந்தைய ஆட்சியரிடம் கலந்து ஆலோசனை நடத்தி உள்ளதாகவும், அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என கூறிய அவர், நிச்சயமாக மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், மக்கள் அதிகாரிகளை எளிதில் அணுகி தங்களது குறைகளை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்படும் எனவும், தன்னுடைய செல்போன் எண்ணை தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப் படுத்தப்பட்டு எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் தன்னிடமும் பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், தென்காசி மாவட்டத்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக விளங்கும் விவசாயத்தை மேம்படுத்தவும் விவசாயிகளின் குறைகளுக்கு உடனடி தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், நான் முன்பு பணியாற்றிய தேனி மாவட்டமும் இது போன்ற விவசாய பகுதி என்பதால் அதில் தனக்கு உள்ள அனுபவத்தை தென்காசி மாவட்டத்திலும் புகுத்தி விவசாயிகளின் வளர்ச்சிக்கான தேவையான நடவடிக்கைகள் எடுப்பேன் எனவும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / ANANDHAN