Enter your Email Address to subscribe to our newsletters

பாலக்காடு , 30 ஜூன் (ஹி.ச.)
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சூண்டல் பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து உள்ளது.
சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் தெருநாய்கள் துரத்தி கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதனால் சிலர் காயமடைந்ததுடன், வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் 7-ம் வகுப்பு மாணவர் மற்றும் பிளஸ்-2 மாணவர் உள்பட 3 பேரை தெருநாய்கள் கடித்தன.
இதனால் அந்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதற்கிடையே, சூண்டல் அரசு பள்ளி வளாகத்திற்குள் ஒரு தெருநாய் நுழைந்து 5 குட்டிகளை ஈன்றுள்ளது.
அதே நாய் பள்ளி வளாகத்திலேயே சுற்றித்திரிந்து வந்ததாகவும், ஒரு மாணவரை கடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே பெரும் அச்சம் நிலவியது.
பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, கல்வித்துறையின் அனுமதியுடன் பள்ளிக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்றும் (செவ்வாய்க்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில்,
பள்ளி வளாகத்தில் உள்ள தெருநாய் மற்றும் அதன் 5 குட்டிகள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகே பள்ளி மீண்டும் திறக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று தாய் நாயையும் அதன் 5 குட்டிகளையும் பிடித்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
இதனால் பள்ளி நாளை முதல் வழக்கம்போல் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA