Enter your Email Address to subscribe to our newsletters

ராஜஸ்தான், 30 ஜூன் (ஹி.ச)
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் சிங்கானா பகுதியில் இயங்கும் தனியார் பிளே ஸ்கூலுக்குச் சொந்தமான வேன் ஒன்று காப்பர் பகுதியில் இருந்து சிங்கானாவை நோக்கி இன்று காலை 10 குழந்தைகளுடன் சென்று கொண்டிருந்தது.
காஞ்சானியா கி தானி என்ற இடத்திற்கு அருகே சென்றபோது, வேனின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை ஓட்டுநர் கவனித்துள்ளார்.
சுதாரித்துக்கொண்ட அவர், சாலையோரம் வேனை உடனடியாக நிறுத்தி, உள்ளே இருந்த அனைத்து குழந்தைகளையும் பதற்றமின்றி வெளியேற்றினார்.
குழந்தைகள் அனைவரும் வெளியேறிய சில நிமிடங்களிலேயே வேன் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
வேன் எரிவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்தில் திரண்டனர்.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை முழுமையாக அணைத்தனர்.
இருப்பினும், அதற்குள் வேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது.
இந்த விபத்தில் குழந்தைகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதது பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஓட்டுநரின் துரிதமான செயல்பாட்டிற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். வேனில் தீ விபத்து ஏற்பட்டதற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
Hindusthan Samachar / vidya.b