Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 04 ஜூன் (ஹி.ச.)
2026-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரரான வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
பீகாரைச் சேர்ந்த 15 வயதான சூர்யவன்ஷி, இந்த தொடரில் 16 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 5 அரைசதங்கள் உள்பட மொத்தம் 776 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 63 பவுண்டரிகளும், 72 சிக்சர்களும் விளாசி தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரராக முதலிடத்தை பிடித்துள்ளார்.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அதுல் வாசன், சூர்யவன்ஷியின் திறமையை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,
ஒரு தலைமுறையில் கோடியில் ஒருவருக்குத்தான் இத்தகைய திறமை அமையும். இந்த இளம் வீரரின் முதிர்ச்சியும், துணிச்சலும் என்னை 16 வயது சச்சின் தெண்டுல்கரை நினைவூட்டுகின்றன. 1989-ம் ஆண்டு பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது அறிமுகமான சச்சின், வயதுக்கு மீறிய ஆட்ட முதிர்ச்சியையும், வேகப்பந்து வீச்சாளர்களை அஞ்சாமல் எதிர்கொள்ளும் தைரியத்தையும் வெளிப்படுத்தினார்.
அதேபோன்ற தனித்துவமான திறமையையும், இயற்கையாகவே கிடைத்த ஆட்டத்திறனையும் சூர்யவன்ஷியிடமும் காண்கிறேன். அவர் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.
இருப்பினும், சச்சினுக்கு அமைந்தது போல் அவரது கிரிக்கெட் வாழ்க்கையிலும் அனைத்தும் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA