Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா , 04 ஜூன் (ஹி.ச.)
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் (டிஎம்சி) கட்சியில் கடும் உள்கட்சி மோதல் வெடித்துள்ளது.
கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ரிதப்ரதா பானர்ஜி தலைமையிலான கிளர்ச்சி அணி, தங்களுக்கே பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாகவும், சட்டமன்றத்தில் தங்களது அணியே அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற சபாநாயகர் ரதீந்திரநாத் போஸை சந்தித்த ரிதப்ரதா பானர்ஜி, 58 முதல் 60 டிஎம்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதங்களை சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, தன்னை எதிர்க்கட்சித் தலைவராக சபாநாயகர் அங்கீகரித்துள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் அலுவலக அறையின் சாவி தமக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமீபத்தில் நடைபெற்ற மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து டிஎம்சி கட்சிக்குள் அதிருப்தி அதிகரித்து வந்தது. கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி, கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிதப்ரதா பானர்ஜி உள்ளிட்ட சிலரை கட்சியில் இருந்து நீக்கியது.
இதற்கிடையில், கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு, மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கிளர்ச்சி அணி கூறியுள்ளது.
அதே நேரத்தில், இது கட்சிப் பிளவு அல்ல என்றும், மம்தா பானர்ஜியே தங்களது தலைவராக தொடர்கிறார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பரபரப்பான விவகாரம் குறித்து சபாநாயகர் அலுவலகம் மற்றும் டிஎம்சி தலைமையகம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இது மேற்கு வங்காள அரசியலில் இந்த நிகழ்வு புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA