Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 04 ஜூன் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று பிறந்த 10 குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் க.கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கீதாஜீவன்,
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை குறித்து கடுமையாக விமர்சித்தார்.
108 இடங்களை வென்று ஆட்சிக்கு வந்த கட்சியின் கட்டுப்பாட்டில்தான் காவல்துறை உள்ளது. இருப்பினும் சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்றார்.
மேலும், ஆறு மாத கால அவகாசம் கேட்பது நகைச்சுவையாக உள்ளது. மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதே அரசின் முதல் கடமை. நடைபெறும் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து கேள்வி கேட்காமல் இருக்க முடியாது” என்று கூறினார்.
முதல்வர் விஜய் குறித்து பேசிய அவர்,
திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் பிரசார காலத்தில் பேசியதைப் போலவே அதே ஸ்கிரிப்ட், அதே உணர்ச்சி, அதே நடிப்புடன் பேசினார். முதல்வர் சகஜ நிலைக்கு வந்து தமிழக மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என விமர்சித்தார்.
விவசாயிகள் கடன் தள்ளுபடி தொடர்பாக, தேர்தல் அறிக்கையில் 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்” என்றார்.
திமுகவின் முன்னாள் கூட்டணிக் கட்சிகள் தற்போது திமுகவை விமர்சிப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,
கூட இருந்து கொண்டே குழி தோண்டியிருப்பது தற்போது வெளிப்பட்டுள்ளது. இது குறித்து திமுக தொண்டர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்றார்.
இறுதியாக, “த.வெ.க. ரியல் மற்றும் ரீல்ஸ் என பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது. உண்மை விரைவில் மக்களுக்கு புரியும். விரைவில் விஜயின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறும் என்று கீதாஜீவன் விமர்சித்தார்.
Hindusthan Samachar / GOKILA arumugam