Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியதை அடுத்து, பாஜக தொண்டர்களுக்கு அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில்,
பாஜக வளர்ச்சிக்காக அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்து கடுமையாக உழைத்தார் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இப்போது அவர் எடுத்திருப்பதாகக் கூறப்படும் தனிப்பட்ட முடிவுகள், கட்சியின் உண்மைத் தொண்டர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தையும் மனவருத்தத்தையும் தந்துள்ளது.
ஏனென்றால், பாஜக என்பது தனிநபர்களை நம்பி இருக்கும் கட்சி அல்ல; இது தூய்மையான கொள்கைகளையும், தேசபக்தியையும் அடித்தளமாகக் கொண்ட ஒரு இயக்கம். எந்தக் காலத்திலும் இங்கே தனிமனிதர்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்தது கிடையாது. கட்சியில் பதவிகளும் பொறுப்புகளும் தற்காலிகமானவை, ஆனால் கட்சியின் சித்தாந்தமும் தேசப்பணியும் மட்டுமே நிரந்தரமானது.
டெல்லி தேசியத் தலைமை, அண்ணன் அண்ணாமலை அவர்களுக்குக் கட்சியின் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்குப் பெரிய அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் கொடுத்திருந்தது. அப்படி இருக்கும்போது, கட்சிக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தால் கூட, அதை தலைவர்களிடம் பேசித் தீர்த்துக் கொண்டு கட்சிக்குள்ளேயே தொடர்வதுதான் தர்மம்.
அதை விடுத்து, தனியாகப் புதிய பாதை தேடுவது உண்மையான தொண்டனால் ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழகத்தில் பாஜக இன்று வளர்ந்திருக்கிறது என்றால், அதற்குப் பின்னால் லட்சக்கணக்கான சாதாரண தொண்டர்களின் உழைப்பும் தியாகமும் மட்டுமே உள்ளது என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது.
நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நேர்மையான தலைமையைப் பார்த்து பாஜகவிற்கு வந்த எந்தவொரு உண்மையான தேசபக்தனும், தனிநபர் அரசியலின் பின்னால் போக மாட்டான். நம் நாடு உலக அரங்கில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்றால், நாம் அனைவரும் பாரத பிரதமர் மோடி அவர்களின் பின்னால் இரும்பு அரணாக உறுதியோடு நிற்க வேண்டும்.
எனவே, பாஜகவின் தேசியத் தலைமை காட்டும் பாதையில் ஒன்றிணைந்து, கட்டுக்கோப்பாக அணிவகுத்து நிற்க வேண்டி அனைத்து மாநில மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகளையும் தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
Hindusthan Samachar / ANANDHAN