Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 05 ஜூன் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் காஞ்சிகோவில் பகுதியைச் சேர்ந்த ராஜா - பார்கவி தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.
இவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.
குழந்தைக்கு ரிதன்யா என பெயர் சூட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வீட்டில் குழந்தைக்கு பால் கொடுத்த பின்னர் வழக்கம்போல் தூங்க வைத்ததாக கூறப்படுகிறது.
சிறிது நேரம் கழித்து குழந்தை அசைவின்றி இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் காஞ்சிகோவில் பகுதி கிராம சுகாதார செவிலியர் பாரதிக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த செவிலியர் குழந்தையை பரிசோதனை செய்தபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
பால் குடித்தபோது புரை ஏறியதே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், உயிரிழப்புக்கான துல்லியமான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து குழந்தையின் தாய் பார்கவி அளித்த புகாரின் பேரில் காஞ்சிகோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், குழந்தையின் உடல் பரிசோதனை அறிக்கை கிடைத்த பின்னரே உயிரிழப்புக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Hindusthan Samachar / ANANDHAN