பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்ட கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இல்லை - மாநில செயற்குழு விளக்கம்
சென்னை, 05 ஜூன் (ஹி.ச) காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறவில்லை என்று அக்கட்சி
M.Veerapandian ,CPI TN secretary


சென்னை, 05 ஜூன் (ஹி.ச)

காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ள

தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம் பெறவில்லை என்று அக்கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக வெற்றிக்கழகத்தின் ஆதரவுடன் காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, தனது பதிவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும் அந்த கூட்டணியின் அங்கமாக குறிப்பிட்டிருப்பது தவறானது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அத்தகைய கூட்டணி அமைப்பது தொடர்பாகவோ, குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவு கோரியோ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை யாரும் அணுகவில்லை என்றும், கட்சித் தலைமையுடன் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

“தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி” என்ற பெயரில் எந்த கூட்டணி பற்றியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தகவல் இல்லை எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று ஆட்சியமைத்த தமிழக வெற்றிக்கழகத்திற்கு, ஆளுநர் ஆட்சி அல்லது மறைமுக பாஜக ஆட்சி அமையக்கூடாது என்ற அடிப்படையில் மட்டுமே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு வழங்கியதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

எனவே, பிரவீன் சக்கரவர்த்தி குறிப்பிட்டுள்ள கூட்டணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெறவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தி, மாநில செயற்குழு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ