Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 05 ஜூன் (ஹி.ச.)
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாத இறுதியில் அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த நாட்டு அணிக்கு எதிராக 2 டி20 போட்டிகளில்
(26, 28-ம் தேதிகள்) விளையாடுகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது.
இந்த தொடர்களுக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்பட உள்ளது. அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழுவினர் மும்பையில் கூடி அணித் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்திய டி20 அணியின் கேப்டனாக உள்ள சூர்யகுமார் யாதவின் பதவி அயர்லாந்து தொடருக்கு முன்னதாக முடிவுக்கு வரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பிப்ரவரி–மார்ச் மாதங்களில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை அவரது தலைமையில் இந்திய அணி வென்றிருந்தாலும், சமீப காலமாக பேட்டிங்கில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு செயல்படவில்லை என்று கூறப்படுகிறது.
அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய தலைமையை உருவாக்கும் நோக்கில் தேர்வுக்குழுவினர் செயல்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக சூர்யகுமார் யாதவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக 31 வயதான ஸ்ரேயாஸ் அய்யர் நியமிக்கப்பட உள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீப காலமாக சிறப்பான ஆட்டத்தையும், தலைமைத்துவ திறமையையும் வெளிப்படுத்தி வரும் ஸ்ரேயாஸ் அய்யருக்கு தேர்வுக்குழுவினர் முக்கியத்துவம் அளித்து வருவதாக கூறப்படுகிறது.
எனினும், புதிய கேப்டன் யார் என்பது குறித்த இறுதி முடிவு இந்திய அணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் போது தெரியவரும்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA