Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை,05 ஜூன் (ஹி.ச.)
சென்னையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 55 வயது நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
வழக்கில் தொடர்புடைய 55 வயது நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
பின்னர், மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழு தீவிர விசாரணை நடத்தி, இறுதி அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று (04.06.2026) தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ.10,000 அபராதமும் விதித்தது. அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இவ்வழக்கில் சிறப்பாக புலனாய்வு மேற்கொண்டு, சாட்சிகளை முறையாக ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்றப் பணிகளில் ஈடுபட்ட காவல் குழுவினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
Hindusthan Samachar / P YUVARAJ