Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 05 ஜூன் (ஹி.ச.)
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இயற்கை நமக்கு அளித்துள்ள வரப்பிரசாதமான பூமியைக் காப்பது அனைவரின் தலையாய கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொருவரும் தங்களது மனதில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்றும், தெருக்களில் குப்பைகளை கொட்டுவது மற்றும் நீர்நிலைகளை அசுத்தப்படுத்துவது போன்ற செயல்கள் இயற்கைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இயற்கை வளங்களை பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என்றும், உலக சுற்றுச்சூழல் தினம் என்பது வெறும் விழிப்புணர்வு நாளாக மட்டுமல்லாமல், நமது பொறுப்புகளையும் கடமைகளையும் நினைவூட்டும் நாளாகும் என்றும் கூறியுள்ளார்.
மரங்களை பாதுகாப்பது, பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது, நீரை சிக்கனமாக பயன்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் அனைவரும் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், மக்களும் அரசும் இணைந்து செயல்பட்டால்தான் நாட்டை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது எதிர்கால தலைமுறையினருக்கான மிகப்பெரிய பொறுப்பு என்றும், “பூமி நமக்குத் தாயாக இருந்து அனைத்தையும் வழங்குகிறது; அதற்கு நன்றிக்கடனாக இயற்கையைக் காப்போம்” என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், “என் நாடு என் வீடு” என்ற உணர்வோடு அனைவரும் நாட்டை சுகாதாரமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறி, உலக சுற்றுச்சூழல் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ