Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 05 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
கேரளப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என வானிலை மையம் கணித்துள்ளது.
குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ள வானிலை மையம், நெல்லை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மதுரை, சிவகங்கை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.
அதேபோல், நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் எனவும், நெல்லை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தென்காசி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாட்டில் நேற்று 12 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P