Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 06 ஜூன் (ஹி.ச.)
முரசொலியில் வெளியான கட்டுரை தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப் பதிவில்,
தேர்தலில் திமுக சந்தித்த பின்னடைவு குறித்து அக்கட்சித் தலைமை சுயபரிசோதனை செய்யாமல், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை தாக்குவது தோல்வியை மறைக்கும் முயற்சியாகவே தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தேர்தல் தோல்விகளை சந்தித்தபோதெல்லாம் கருணாநிதி அரசியல் முதிர்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டு, தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து மீண்டு வந்ததாகவும், ஆனால் தற்போதைய திமுக தலைமையால் ஒரு தோல்வியைக் கூட அரசியல் நாகரிகத்துடன் எதிர்கொள்ள முடியவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், கூட்டணிக் கட்சிகள் மீதும், குறிப்பாக காங்கிரஸ் மீதும் விமர்சனங்களை முன்வைப்பது, பாஜகவிடம் தங்களின் காங்கிரஸ் எதிர்ப்பை நிரூபிக்க முயற்சிப்பது போல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக மக்கள் திமுக அரசின் ஊழல், கமிஷன் அரசியல், குடும்ப ஆதிக்கம், நிர்வாகத் தோல்வி மற்றும் அகந்தைக்கு எதிராகவே வாக்களித்ததாகக் கூறிய மாணிக்கம் தாகூர், “திராவிட மாடல்” என்ற பெயரில் வளர்ச்சி அரசியல் அல்ல, “கமிஷன் மாடல்” அரசியல் நடைபெற்றதாக மக்கள் கருதியதே தேர்தல் முடிவில் பிரதிபலித்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், உதயநிதி தலைமையின் அரசியல் மற்றும் நிர்வாகத் தோல்விகளும் திமுகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறிய அவர், மக்கள் வழங்கிய தீர்ப்பை மதித்து சுயபரிசோதனை செய்வதற்குப் பதிலாக மற்றவர்களைக் குறை கூறிக் கொண்டே இருந்தால் திமுகவின் வீழ்ச்சி மேலும் வேகமாகும் என எச்சரித்துள்ளார்.
மேலும், “ஊழல், கமிஷன், இரட்டை வேடம் மற்றும் அதிகார அகந்தைக்கு தமிழகத்தில் இனி இடமில்லை என்று மக்கள் தெளிவான செய்தியை வழங்கியுள்ளனர் என்றும் மாணிக்கம் தாகூர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P