Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 06 ஜூன் (ஹி.ச.)
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் சுவாமி தரிசனத்திற்காக வந்த பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதிக்கு வருகை தந்து வருகின்றனர்.
இதன் காரணமாக, பக்தர்கள் தங்க வைக்கப்படும் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன.
காத்திருப்பு அறைகளைத் தாண்டி, சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள ஷீலா தோரணம் பகுதி வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடும் வெயிலால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தன்னார்வலர்கள் மூலம் குடிநீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
நேற்று ஒரே நாளில் 80,350 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். மேலும், 36,597 பேர் முடி காணிக்கை செலுத்தியதுடன், உண்டியல் காணிக்கையாக ரூ.3.27 கோடி வசூலாகியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இலவச தரிசன வரிசையில் வந்த பக்தர்கள் சுமார் 18 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P