Enter your Email Address to subscribe to our newsletters

சித்தாந்தம் , 07 ஜூன் (ஜி.ச.)
ஆந்திரப் பிரதேச மாநிலம், காமதேனுவுலங்கா கிராமத்தைச் சேர்ந்த சத்யநாராயணா என்ற முதியவரிடம், இளைஞர் ஒருவர் பேசிய வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த வீடியோவில்,
சந்திரபாபு நாயுடுவை இதுவரை நேரில் பார்த்ததுண்டா? என்று கேட்டபோது, இல்லை, நான் இதுவரை அவரைப் பார்த்ததில்லை என்று சத்யநாராயணா பதிலளித்தார்.
மேலும், அவரை சந்திக்க விருப்பமா? என்று கேட்டதற்கு, ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து, இந்த மாதம் 9-ந் தேதி சித்தாந்தம் பகுதிக்கு முதல்-மந்திரி வர உள்ளதாகவும், அவரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் அந்த இளைஞர் கூறினார்.
இந்த வீடியோ முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் கவனத்திற்குச் சென்றது. இதற்கு பதிலளித்து அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், சத்யநாராயணா காரு... நாளை சித்தாந்தத்தில் சந்திப்போம் என்று பதிவிட்டார்.
மேலும், சித்தாந்தம் பகுதியில் நடைபெறும் தனது சுற்றுப்பயணத்தின் போது சத்யநாராயணாவை நேரில் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
ஒரு சாதாரண குடிமகனின் விருப்பத்துக்கு முதல்-மந்திரி உடனடியாக பதிலளித்திருப்பது பொதுமக்கள் மற்றும் சமூக வலைதள பயனர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA