Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 07 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் உள்ள கோயில்களில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், தவறுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று சய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார் கூறுகையில்,
கோயில்களின் நிதி நிர்வாகம், வரவு செலவு கணக்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக கோயில்களுக்குச் சொந்தமான தங்கத்தை முதலீடு செய்வதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், அந்த கோணத்திலும் தனியாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒருங்கிணைந்த ஆய்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் கோயில் சொத்துகள், நகைகள், நிதி ஆதாரங்கள் மற்றும் அவற்றின் பயன்பாடு குறித்த முழுமையான விவரங்கள் சேகரிக்கப்படும்.
மேலும், கோயில்களில் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்துவதற்கு அரசு தரப்பில் எந்தவித தடையும் இல்லை. பக்தர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமிழில் வழிபாடுகள் நடத்திக்கொள்ளலாம்.
பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் உள்ள வைகை ஆற்றை தூர்வாருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படும். ஆற்றை தூர்வாருவதன் மூலம் நீர்வளம் பெருகுவதோடு, மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.
கோயில் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதும், பக்தர்களின் நம்பிக்கையை காப்பதும் அரசின் முக்கிய கடமை.
இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் கூறினார்.
Hindusthan Samachar / vidya.b