Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 07 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் நீலகிரி, திருப்பூர், தேனி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் ஒருசில இடங்களில் மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தென்காசி, நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளிலும், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களிலும் இன்றும், நாளையும் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் எனக் கணித்துள்ளது.
இவை தவிர தருமபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.இதற்கிடையே, தமிழ்நாட்டில் நேற்று 11 இடங்களில் வெயில் சதம் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டியது. சென்னை நுங்கம்பாக்கம், வேலூர், கடலூர், நாகை ஆகிய இடங்களில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும், மதுரை நகரம், பரங்கிப்பேட்டை, திருத்தணி, தஞ்சாவூர், தொண்டி ஆகிய இடங்களில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயிலும் பதிவானது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P