Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 08 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது.
மாநிலம் முழுவதும் 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 159 பாடப்பிரிவுகளில் சுமார் 1.26 லட்சம் இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வியாண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு கடந்த மே 7-ஆம் தேதி தொடங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த ஜூன் 5 மற்றும் 6-ஆம் தேதிகளில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் வசதிக்காக கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் வரும் ஜூன் 18-ஆம் தேதி வரை அந்தந்த கல்லூரிகளிலேயே நடைபெற உள்ளன.
விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் உரிய சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் கலந்துகொண்டு சேர்க்கையை உறுதி செய்துகொள்ளுமாறு உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் இந்த கலந்தாய்வு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / vidya.b