Enter your Email Address to subscribe to our newsletters

கடலூர், 08 ஜூன் (ஹி.ச.)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பழக்கமான இளம்பெண்ணை தகாத உறவுக்கு அழைத்ததாக கூறப்படும் முதியவர், அவரை அவமானப்படுத்தும் வகையில் வீடியோ எடுத்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆத்திரத்தில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலை நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மீதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி (28), அதே பகுதியைச் சேர்ந்த மகேந்திரன் (64) என்பவருடன் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் பழக்கம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்பு மகேந்திரன் தன்னை தகாத உறவுக்கு அழைத்ததாக காமாட்சி எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவரை செருப்பால் அடித்த வீடியோவை பதிவு செய்து உறவினர்களுக்கு அனுப்புவதாக மிரட்டியுள்ளார். பின்னர் அந்த வீடியோவை வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், இன்று காலை காமாட்சி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது கட்டையால் தாக்கியதில் காமாட்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரைக் காப்பாற்ற முயன்ற தந்தை பாண்டுரங்கனும் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காமாட்சியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மகேந்திரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam