Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 08 ஜூன் (ஹி.ச.)
மலேசியாவின் தொழில் வளர்ச்சியில் முன்னணி மாநிலமாக விளங்கும் பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வர் ஜெகதீப் சிங் டியோ, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார்.
கோவை விமான நிலையத்திற்கு வந்த அவருக்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான வர்த்தகத் தூதர் சி.எம். விஷ்ணு பிரபு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது ஜெகதீப் சிங் டியோவுக்கு பூங்கொத்து வழங்கியும், பொன்னாடை அணிவித்தும் விஷ்ணு பிரபு வரவேற்றார்.
இதில் தொழில்துறை பிரதிநிதிகள், வர்த்தக அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீப் சிங் டியோ,
இந்தியா மற்றும் மலேசியா நாடுகளுக்கு இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக தெரிவித்தார்.
குறிப்பாக தமிழ்நாடு மற்றும் பினாங்கு மாநிலங்களுக்கு இடையே தொழில், முதலீடு, தகவல் தொழில்நுட்பம், உற்பத்தித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான சிறந்த வாய்ப்புகள் இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், பினாங்கு மாநிலம் மலேசியாவின் முக்கிய தொழில் மற்றும் முதலீட்டு மையமாக திகழ்வதுடன், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களை ஈர்த்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்கள் பினாங்கில் முதலீடு செய்யவும், தொழில் விரிவாக்கம் மேற்கொள்ளவும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் பயணத்தின் போது தொழில் மற்றும் வர்த்தக வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு தரப்பினருடன் சந்திப்பு நடத்தி, இரு பகுதிகளுக்கும் பயனளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் கூட்டுறவு முயற்சிகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / Durai.J