Enter your Email Address to subscribe to our newsletters

குன்னூர், 08 ஜூன் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பந்துமை பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை ஒன்று தொடர்ந்து நடமாடி வருவதால் அப்பகுதி மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இரவு நேரங்களில் குடியிருப்புகளை ஒட்டிய தேயிலைத் தோட்டங்கள் மற்றும் சாலையோரங்களில் சிறுத்தை நடமாடுவதை உள்ளூர் மக்கள் நேரில் கண்டுள்ளனர்.
மேலும், அப்பகுதியில் வளர்க்கப்படும் கால்நடைகள் மீது சிறுத்தை தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக, மாலை 6 மணிக்கு மேல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை தவிர்த்து வருகின்றனர்.
பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களும், தோட்டத் தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களும் பெரும் பதற்றத்துடன் காணப்படுகின்றனர்.
இந்நிலையில், உடனடியாக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து, ஊருக்குள் உலா வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதிக்குள் பாதுகாப்பாக விரட்ட வேண்டும் என பந்துமை பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்றும், இரவு நேர ரோந்துப் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், பொதுமக்கள் தனியாக நடமாடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b