Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 08 ஜூன் (ஹி.ச.)
மதுரையில் வசித்து வரும் பிரபல யூடியூபரும் அரசியல் விமர்சகருமான மாரிதாஸ், சென்னை சைபர் கிரைம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மைக்காலமாக தமிழக அரசின் செயல்பாடுகள், முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர்கள் தொடர்பாக தனது யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைதளங்களில் மாரிதாஸ் தொடர்ந்து கருத்துகள் மற்றும் விமர்சனங்களை பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவர் மீது சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், சென்னை சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து மதுரை வந்தனர்.
அவர்கள் மதுரை மாநகர காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் சூர்யா நகர் பகுதியில் உள்ள மாரிதாஸ் இல்லத்துக்குச் சென்று கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
பின்னர் அவரை காவலில் எடுத்து சென்னைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
எனினும், கைது செய்யப்பட்டதற்கான துல்லியமான காரணம் மற்றும் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விவரங்கள் குறித்து காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் இதுவரை வெளியாகவில்லை.
விசாரணை முன்னேற்றத்தைத் தொடர்ந்து கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P