Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
கடந்த 2013ஆம் ஆண்டு எழும்பூர் பகுதியில் உள்ள நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த சாலையோர மக்கள் மீது அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதியது.
இந்த கோர விபத்தில் 13 வயது சிறுவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும் 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்தவர் மதுபோதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கு தொடர்பாக தொழிலதிபர் ஷாஜி மீது கொலை செய்யாத மரணம் விளைவித்தல், காயம் ஏற்படுத்துதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கு விசாரணை 13 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தரப்பு சாட்சியங்களையும் விசாரித்த நீதிமன்றம் இறுதி தீர்ப்பை வழங்கியது.
குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ஷாஜியை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
தண்டனை விவரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபரீதங்களுக்கு இந்த வழக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
Hindusthan Samachar / vidya.b