Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
மங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி இயக்கப்பட்டு வந்த எக்ஸ்பிரஸ் ரயில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆவடி ரயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
ரயிலின் பேட்டரிக்கு மின்சாரம் வழங்கும் வயர்களில் ஏற்பட்ட பழுது காரணமாக ரயிலின் சில முக்கிய மின்சார வசதிகள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாதுகாப்பு கருதி ரயில் ஆவடி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு, கோளாறை சரிசெய்ய ரயில்வே தொழில்நுட்ப பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
எனினும், 45 நிமிடங்களுக்கு மேலாகியும் பழுதை முழுமையாக சரிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சென்னை நோக்கி அவசரமாக செல்ல வேண்டிய பயணிகள் கவலை அடைந்தனர். குறிப்பாக அலுவலகப் பணிகளுக்காகவும், பிற முக்கிய தேவைகளுக்காகவும் சென்னை செல்ல இருந்தவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
பயணிகளின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, சென்னை நோக்கி தொடர்ந்த பயணத்தை மேற்கொள்ள விரும்புவோர் புறநகர் மின்சார ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என ரயில்வே ஊழியர்கள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, ஏராளமான பயணிகள் தங்களது உடமைகளுடன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கி, மின்சார ரயில்கள் மூலம் சென்னை நோக்கி பயணித்தனர்.
இந்த திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டதுடன், பயணிகள் பெரும் அவதிக்குள்ளானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பழுதை சரிசெய்யும் பணிகளை ரயில்வே அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டனர்.
Hindusthan Samachar / P YUVARAJ