Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 01 ஜூலை (ஹி.ச)
பிரதமரின் ‘ஆயுஷ்மான் பாரத் - பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா’ (PM-JAY) திட்டத்தின் கீழ் 1.10 கோடி பேர் இலவச சிகிச்சை பெற்றதன் மூலம் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பொன்மொழிக்கு ஏற்ப, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் செயல்படுத்தப்படும் ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் இத்திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.1.56 லட்சம் கோடி மதிப்பிலான இலவச மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் கண் சிகிச்சை, மகப்பேறு, மகளிர் நல சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் லட்சக்கணக்கான மக்கள் உயர்தர மருத்துவ சேவைகளை கட்டணமின்றி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அடித்தட்டு மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகம் தேசிய அளவில் முதலிடம் பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ள நயினார் நாகேந்திரன், இத்திட்டத்தை உருவாக்கி செயல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ