Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச.)
தமிழ்நாட்டில் ‘விபி ஜிராம் ஜி’ என்ற பெயரிலான 125 நாள் வேலை உறுதித் திட்டம் இன்று, ஜூலை 1 ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருகிறது.
கிராமப்புற குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஓர் ஆண்டுக்கு 125 நாட்கள் வேலை உத்தரவாதம் அளிக்கப்படும்.
திட்டத்திற்கான மொத்த செலவினத்தில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் பங்களிக்கும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராமப்புற உள்கட்டமைப்பு பணிகளும், நீர்நிலை மேம்பாடு போன்ற வளர்ச்சித் திட்டங்களும் விரைவுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை செய்த தொழிலாளர்களுக்கு ஊதியம் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக, பணி முடிந்த 15 நாட்களுக்குள் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக சம்பளம் வரவு வைக்கப்படும் என்று அரசு உறுதி அளித்துள்ளது.
இதற்கான முழு செயல்முறையும் டிஜிட்டல் முறையில் கண்காணிக்கப்படும் எனவும், வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாநிலம் முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இன்று முதல் பணிகள் தொடங்கப்படும் நிலையில், தகுதியான பயனாளிகள் தங்கள் பகுதி ஊராட்சி அலுவலகங்களை அணுகி விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b