Enter your Email Address to subscribe to our newsletters

செஸ்டர்-லீ-ஸ்டிரீட் , 01 ஜூலை (ஹி.ச.)
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, அந்த நாட்டுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
செஸ்டர்-லீ-ஸ்டிரீட்டில் உள்ள ரிவர்சைட் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டி, இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரைத் தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தில் 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.
முதல் போட்டியிலேயே வெற்றியுடன் தொடரை தொடங்க வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது.
அயர்லாந்து தொடரில் இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த அளவுக்கு ரன் குவிக்கத் தவறியதால், ஆடும் லெவனில் மாற்றம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குறிப்பாக, இளம் அதிரடி பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்படுமா என்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுகுறித்து கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
எனவே, சூர்யவன்ஷி ஆடும் லெவனில் இடம்பெறுவாரா என்பது டாஸ் நேரத்தில் அறிவிக்கப்படும் இறுதி அணிப் பட்டியலில்தான் தெரியவரும்.
சொந்த மண்ணில் விளையாடும் இங்கிலாந்து அணியும் வெற்றியுடன் தொடரை தொடங்கும் முனைப்பில் இருப்பதால், முதல் டி20 போட்டியில் விறுவிறுப்பான ஆட்டம் அரங்கேறும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA