Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 01 ஜூலை (ஹி.ச)
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில்,
மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பொறுப்பை ஏற்று, இரவு பகல் பாராது அயராது பணியாற்றி வரும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவத் துறை என்பது வெறும் தொழில் அல்ல; அது மனிதநேயத்துடன் கூடிய மகத்தான சேவையாகும். நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடி வரும் மக்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களின் உடல்நலத்தை மீட்டெடுப்பதோடு மட்டுமல்லாமல், நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் வழங்கும் பணியை மருத்துவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அவசர காலங்களிலும், இயற்கை பேரிடர்களின் போதும், தொற்றுநோய் பரவல் காலங்களிலும் தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் மக்கள் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் மருத்துவர்களின் சேவை என்றும் போற்றத்தக்கது.
அவர்களின் தன்னலமற்ற உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு சமூகத்தின் ஆரோக்கியத்தையும் நலனையும் பாதுகாக்கும் முக்கியமான தூணாக விளங்குகிறது.
மருத்துவர்களின் புன்னகை நோயாளிகளின் மனதில் நம்பிக்கையை விதைக்கிறது. அவர்களின் அரவணைப்பும் அக்கறையும், சிகிச்சை பெறுபவர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையையும் மன உறுதியையும் அளிக்கின்றன.
மனிதநேயத்துடன் கூடிய அவர்களின் சேவை எண்ணற்ற குடும்பங்களின் வாழ்வில் புதிய ஒளியை ஏற்படுத்தி வருகிறது.
தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில், அனைத்து மருத்துவர்களும் மகிழ்ச்சியுடனும் மனநிறைவுடனும் தொடர்ந்து மக்கள் சேவையில் ஈடுபட்டு, சமூகத்தின் நலனுக்காக தங்களது பணியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ