காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் - அமைச்சர் கமலி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரம், 01 ஜூலை (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே உள்ள கெருகம்பாக்கம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி இந்த சிறப்பு முகாமை முறை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் - அமைச்சர் கமலி தொடங்கி வைத்தார்


காஞ்சிபுரம், 01 ஜூலை (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் அருகே உள்ள கெருகம்பாக்கம் ஊராட்சியில் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் இன்று கோலாகலமாக தொடங்கப்பட்டது.

கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கமலி இந்த சிறப்பு முகாமை முறைப்படி தொடங்கி வைத்தார்.

கால்நடைகளை தாக்கும் கொடிய நோயான கோமாரி நோயிலிருந்து மாடுகள் மற்றும் எருமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை மாநிலம் முழுவதும் தீவிர தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கெருகம்பாக்கத்தில் நடைபெற்ற இந்த முகாமில், நூற்றுக்கணக்கான கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

முகாமை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் கமலி கூறுகையில், கால்நடை வளர்ப்பு விவசாயிகளின் நலனில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

கோமாரி நோய் பரவலை முற்றிலும் தடுக்க, அனைத்து கால்நடை வளர்ப்போரும் தவறாமல் தங்கள் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

மேலும், நிகழ்ச்சியின் போது கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஊட்டச்சத்து மிகுந்த தீவனங்களையும் விவசாயிகளுக்கு அமைச்சர் கமலி வழங்கினார்.

இந்த தீவனங்கள் கால்நடைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, பால் உற்பத்தியை பெருக்க உதவும் என கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், கால்நடை பராமரிப்புத் துறை உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மாவட்டம் முழுவதும் வரும் வாரங்களில் கிராமங்கள் தோறும் இதுபோன்ற தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b