Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய கருத்துகளுக்கு முன்னாள் சபாநாயகர் அப்பாவு கடும் பதிலடி அளித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், தேர்தல் முடிவுகள், கரூர் பிரச்சாரக் கூட்டம் மற்றும் அரசியல் கண்ணியம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டி அவர் விமர்சனம் செய்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததை குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர், தேர்தலுக்கு முன் 234 தொகுதிகளிலும் த.வெ.க. சார்பில் தாமே போட்டியிடுவதாக கூறிய நிலையில், 127 தொகுதிகளில் த.வெ.க. தோல்வியடைந்ததை மறந்துவிட்டாரா என்று அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கரூர் பிரச்சாரக் கூட்டத்திற்கு மதியம் 12.30 மணிக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சுமார் 7 மணி நேரம் தாமதமாக வந்து 20 நிமிடங்கள் மட்டுமே பேசியதை நினைவுபடுத்திய அவர், 41 பேர் உயிரிழப்புக்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், உங்களைப் போன்று பழிவாங்கும் அரசியல் செய்ய நினைத்திருந்தால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்திருப்பார். ஆனால் மு.க.ஸ்டாலின் எப்போதும் கண்ணியமான அரசியலையே கடைப்பிடிப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தீர்ந்து போன சக்தியும், தீய சக்தியும் ஊழலில் ஒன்றுதான் என்று கூறும் முதலமைச்சர், அந்தக் கட்சியில் இருந்த ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளானவர்களை தொடர்ந்து தங்கள் கட்சியில் இணைத்துக் கொள்வது தூய சக்தியா அல்லது துர்நாற்ற சக்தியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இறுதியாக, இது ஜனநாயக நாடு. மக்கள் தான் எஜமான்கள். விரைவில் காலமும் மாறும், காட்சிகளும் மாறும், ஆட்சியும் மாறும் என்று தனது பதிவில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ