Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை ,10 ஜூலை (ஹி.ச)
கடந்த மூன்று மாதங்களாக காவிரி நீரைப் பெற தமிழக அரசின் சார்பில் எந்தக் கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்ற கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டியின் கருத்தை சுட்டிக்காட்டி, புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி, தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டெல்டா மாவட்டங்களின் முக்கிய நீராதாரமான காவிரி நீரை நம்பி சுமார் 12 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறுவதாகவும், உரிய நேரத்தில் தண்ணீர் கிடைக்காததால் மேட்டூர் அணை திறக்கப்படாததுடன், குறுவை சாகுபடியும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், காவிரி நதிநீர் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி மே, ஜூன், ஜூலை ஆகிய மூன்று மாதங்களில் மொத்தம் 42.98 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய நிலையில், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட திறந்து விடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் கடந்த மூன்று மாதங்களாக காவிரி நீரைப் பெற எந்தக் கோரிக்கையும் வரவில்லை என்று கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ள டாக்டர் க. கிருஷ்ணசாமி, எட்டு கோடி தமிழக மக்களின் உரிமையைப் பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு அதற்கான அழுத்தத்தை கொடுக்கத் தவறிவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், காங்கிரஸின் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்பதற்காக கர்நாடகத்திடம் தமிழக மக்களின் உரிமையை விட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டதா? என்று கேள்வி எழுப்பிய அவர், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வதை விட தமிழக மக்களின் உரிமையைப் பாதுகாப்பதே அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக, மே, ஜூன், ஜூலை மாதங்களுக்கான தமிழகத்தின் உரிய காவிரி நீர் பங்கீட்டை பெற்றுத் தர முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக நீர்வளத்துறை அமைச்சரை கர்நாடகத்திற்கு அனுப்பி உரிய பங்கீட்டை பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் டாக்டர் க. கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ