Enter your Email Address to subscribe to our newsletters

கரூர், 10 ஜூலை (ஹி.ச)
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் கோ.க. அருண்ராஜ் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளுக்கும் சென்ற அமைச்சர், நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருந்துகள் இருப்பு, மருத்துவ உபகரணங்களின் செயல்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார்.
அப்போது உள்நோயாளிகள் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு வார்டு மற்றும் மருந்தகம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்ட அவர், சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் குறைகள் ஏதும் உள்ளதா என விசாரித்தார்.
மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் கலந்துரையாடிய அமைச்சர், நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவையை எந்தவித தொய்வுமின்றி வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி. சத்யா, மாவட்ட ஆட்சியர் சி. முத்துக்குமரன், மருத்துவமனை முதல்வர் மற்றும் மருத்துவ அலுவலர்கள் உடனிருந்தனர்.
மருத்துவமனையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உடனடியாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
Hindusthan Samachar / vidya.b