Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)
ஒரு அரசின் உண்மையான வலிமை அதன் திட்டங்களில் மட்டும் இல்லை; அந்த அரசு மக்களிடம் ஏற்படுத்தும் நம்பிக்கையில்தான் இருக்கிறது என்று கூறி, முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜயின் ஊழல் ஒழிப்பு தொடர்பான கருத்துகளை அமைச்சர் கீர்த்தனா பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் (X) சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
யார் லஞ்சம் கேட்டாலும் கொடுக்க முடியாது என்று சொல்லுங்கள்... நான் உங்கள் கூட இருக்கிறேன் என்ற முதலமைச்சரின் வார்த்தைகள் சாதாரண அறிவுரை அல்ல; ஒவ்வொரு குடிமகனுக்கும், நடுத்தர குடும்பத்திற்கும், இளைஞர்களுக்கும் அரசு வழங்கும் உறுதியான பாதுகாப்பு என தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக லஞ்சம் தவிர்க்க முடியாத ஒன்றாக கருதப்பட்ட நிலையில், லஞ்சம் கொடுக்க வேண்டாம்; சட்டமும் அரசும் உங்கள் பக்கம் இருக்கிறது என்று முதலமைச்சர் நேரடியாக மக்களிடம் கூறியிருப்பது நல்லாட்சியின் உயர்ந்த அடையாளம் என்றும் அமைச்சர் கீர்த்தனா குறிப்பிட்டுள்ளார்.
மக்களை அதிகாரிகளுக்கு முன் தலைகுனியச் சொல்லாமல், சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து தலைநிமிர்ந்து நிற்கச் சொல்லும் ஆட்சியே மக்கள் ஆட்சி என்றும், நேர்மையை ஊக்குவித்து ஊழலை எதிர்த்து குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்கும் இந்த அணுகுமுறை தமிழ்நாட்டின் நிர்வாக கலாச்சாரத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசுக்கும் மக்களுக்கும் இடையேயான நம்பிக்கையே வளர்ச்சியின் அடித்தளம் என்றும், மக்களுக்கு துணையாக நிற்கும் இந்த உறுதி எதிர்கால தலைமுறைக்கும் சிறந்த முன்னுதாரணமாக அமையும் என்றும் அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.
மேலும், நேர்மை வெல்லட்டும்; ஊழல் தோற்கட்டும்; மக்களின் நம்பிக்கை மேலும் வலுப்பெறட்டும்.
வளர்ச்சியிலும், வெளிப்படைத்தன்மையிலும், நல்லாட்சியிலும் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தொடரட்டும் என்று தனது பதிவில் அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ