ரூ.25,000 கோடி மதிப்பிலான திருக்கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு தாரைவார்க்க முயற்சி– தமிழக அரசை விமர்சித்த நயினார் நாகேந்திரன்
சென்னை, 10 ஜூலை (ஹி.ச.) கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் இனாம் நிலங்களின் பத்திரப்பதிவுத் தடையை நீக்கியதாக வெளியாகியுள்ள தகவலைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் சமூக
Nainar


சென்னை, 10 ஜூலை (ஹி.ச.)

கரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் இனாம் நிலங்களின் பத்திரப்பதிவுத் தடையை நீக்கியதாக வெளியாகியுள்ள தகவலைக் கண்டித்து, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கரூரில் உள்ள நான்கு முக்கிய திருக்கோவில்களுக்குச் சொந்தமான சுமார் ரூ.25,000 கோடி மதிப்பிலான 3,085 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்குத் தாரைவார்க்கும் நோக்கில், அவற்றின் மீதான பத்திரப்பதிவுத் தடையை இந்து சமய அறநிலையத் துறை நீக்கியிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் பரிந்துரை, திருப்பூர் இணை ஆணையரின் பரிந்துரை மற்றும் இந்து சமய அறநிலையத் துறை ஆணையரின் இறுதி உத்தரவு ஆகியவை ஒரே நாளில் பிறப்பிக்கப்பட்டதாகக் கூறிய அவர், இதன் பின்னணி குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் நலப் பணிகளில் இல்லாத அவசரம், கோவில் நிலங்கள் தொடர்பான கோப்புகளை நகர்த்துவதில் மட்டும் ஏன் காட்டப்பட்டது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

அத்துடன், திருக்கோவில் சொத்துகளை பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டே ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசு துணைபோவதாகவும், முந்தைய ஆட்சியில்கூட நடைபெறாத செயலாக இதை குறிப்பிட்டும் நயினார் நாகேந்திரன் தனது பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இறுதியாக, புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட நான்கு கோவில்களுக்குச் சொந்தமான 3,085 ஏக்கர் நிலங்களின் பத்திரப்பதிவுத் தடையை நீக்கிய உத்தரவை முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலையிட்டு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ