மகனைக் கொன்று உடலை துண்டித்து ஆற்றில் வீசிய தந்தை உட்பட 2 பேர் கைது
தேனி, 10 ஜூலை (ஹி.ச.) தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வேந்தர் பாலா (வயது 50) மற்றும் அவரது முதல் மனைவி ராஜலட்சுமியின் மகன் ஸ்ரீகாந்த் (20) இடையே கடந்த 2023-ம் ஆண்டு சொத்து பிரிதல் தொடர்பாக இருவருக்குள்ள
மகனைக் கொன்று உடலை துண்டித்து ஆற்றில் வீசிய தந்தை உட்பட 2 பேர் கைது


தேனி, 10 ஜூலை (ஹி.ச.)

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தேனி கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வேந்தர் பாலா (வயது 50) மற்றும் அவரது முதல் மனைவி ராஜலட்சுமியின் மகன் ஸ்ரீகாந்த் (20) இடையே கடந்த 2023-ம் ஆண்டு சொத்து பிரிதல் தொடர்பாக இருவருக்குள்ளும் மோதல் வெடித்தது.

இந்நிலையில், செப்டம்பர் 2023-ல் ஸ்ரீகாந்த் திடீரென மாயமானார். மகன் மாயமானது குறித்து தாயார் ராஜலட்சுமி மதுரை நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவுப்படி கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட் டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஸ்ரீகாந்திற்கு தேனியைச் சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன் (25) என்பவருடன் முன்விரோதம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அலெக்ஸ்பாண்டியனை பிடித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், அவரும், வேந்தர்பாலா மற்றும் முல்லைநகரை சேர்ந்த கருப்பையா ஆகியோரும் சேர்ந்து ஸ்ரீகாந்தை கொலை செய்து உடலை துண்டுதுண்டாக வெட்டி முல்லைப்பெரியாற்றில் வீசியதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தின்பேரில் வேந்தர்பாலாவை கடந்த ஜூலை 8 ஆம் தேதி இரவு போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரும் நடந்த சம்பவம் குறித்து வாக்குமூலம் அளித்தார்.

இதுதொடர்பாக போலீசார் வெளியிட்ட தகவல்படி, வேந்தர்பாலா 3 திருமணம் செய்துள்ளார். முதல் மனைவியின் மகனான ஸ்ரீகாந்த் அவர் பெயரில் உள்ள சொத்தை தங்களுக்கு கொடுக்குமாறு கேட்டு தகராறு செய்துள்ளார்.

இந்த நிலையில் வேந்தர்பாலா ஒரு ஜோதிடரிடம் ஜாதகம் பார்த்துள்ளார். அப்போது அவருக்கு மகனால் ஆபத்து இருப்பதாக கூறியதாக தெரிகிறது. இதனால் மகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். தன்னுடைய நண்பரான கருப்பையா மூலம், ஸ்ரீகாந்தை தொடர்பு கொண்டு அவருக்கு ஓட்டுனர் உரிமம் பெற்று கொடுத்து, ஆட்டோ வாங்கி தருவதாக ஆசை காட்டினார்.

அதன்பேரில் சம்பவத்தன்று இரவு கருப்பையா, ஸ்ரீகாந்தை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு தேனி அருகே வயல்பட்டி முல்லைப்பெரியாற்று படுகைக்கு அழைத்து சென்றார். அங்கு வேந்தர்பாலாவும், ஸ்ரீகாந்துடன் ஏற்கனவே முன்விரோதம் கொண்டிருந்த அலெக்ஸ்பாண்டியனும் வந்தனர். இந்த முன்விரோதத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள கருப்பையா அழைப்பின்பேரில் அலெக்ஸ்பாண்டியன் அங்கு வந்திருந்தார்.

பின்னர் அவர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர். அப்போது ஸ்ரீகாந்தை துண்டால் கழுத்தை நெரித்து அவர்கள் கொலை செய்தனர். உடலை அப்படியே விட்டால் மாட்டி கொள்வோம் என்பதால், இறைச்சி வெட்டும் கட்டை கத்திகளை அங்கு கொண்டு வந்தனர். அன்று இரவே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிவிட்டு சென்று விட்டனர். தற்போது விசாரணையில் சிக்கி கொண்டனர்

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் வேந்தர்பாலா, அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 2 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தநிலையில், தலைமறைவான கருப்பையாவை தேடி வருகின்றனர்.

மூன்று ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருப்பது தேனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / vidya.b