Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 11 ஜூலை (ஹி.ச.)
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், இளம் தொழில்முனைவோருமான நாரா பிராமணி, ஃபார்ச்சூன் இந்தியா வெளியிட்டுள்ள 2026-ம் ஆண்டுக்கான ‘100 மிகவும் செல்வாக்கு மிக்க பெண்கள்’ பட்டியலில் இடம் பிடித்து கவுரவம் பெற்றுள்ளார்.
வணிகம், தொழில், தலைமைத்துவம் மற்றும் சமூக பங்களிப்பு ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளை படைத்த பெண்களுக்கு ஆண்டுதோறும் இந்த பட்டியலில் இடம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பிராமணி ஆற்றிய பங்களிப்பு, நிறுவனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற விதம், விவசாயிகளுடன் வலுவான உறவை ஏற்படுத்திய செயல்பாடுகள், பால் உற்பத்தித் துறையில் மேற்கொண்ட புதிய முயற்சிகள் ஆகியவற்றை பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிராமணி பெற்றுள்ள இந்த கவுரவத்துக்கு அவரது கணவரும், ஆந்திரப் பிரதேச அமைச்சருமான நாரா லோகேஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
ஃபார்ச்சூன் இந்தியாவின் 100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் பிராமணி இடம் பிடித்திருப்பது பெருமை அளிக்கிறது.
அவர் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து, தடைகளை தகர்த்து பலருக்கும் ஊக்கமாக விளங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, ஆந்திரப் பிரதேச முதல்-அமைச்சர் நாரா சந்திரபாபு நாயுடுவும் பிராமணியின் சாதனையை பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
ஃபார்ச்சூன் இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள பிராமணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த அங்கீகாரம் அவரது தலைமைத்திறன், அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புக்கு கிடைத்த கவுரவம்.
அவர் குடும்பத்துக்கு பெருமை சேர்ப்பதுடன், இளம் பெண்கள், குறிப்பாக தெலுங்கு பெண்கள் தன்னம்பிக்கையுடன் முன்னேறுவதற்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA