Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச.)
தவெக தலைவர் ஜே. ஜோசப் விஜய் தலைமையிலான அரசை வீழ்த்தும் நோக்கில், சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்களிக்க தனக்கு ரூ. 35 கோடி பேரம் பேசப்பட்டதாக ஊத்தங்கரை தொகுதி தவெக எம்.எல்.ஏ. டாக்டர் என். இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தைச் சேர்ந்த மருத்துவர் ராஜசேகர் மற்றும் சேது ராஜன் ஆகிய இருவரும் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் ஒருவரிடம் பேரம் பேசியதாக கூறி நேற்று முன்தினம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் ரூ.56.40 லட்சம் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ராஜசேகருக்கு நேற்று இரவு திடீரென உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் எதற்காக கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்தும், பேரம் பேசியதன் பின்னணி குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b