Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 11 ஜூலை (ஹி.ச)
1728ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் கட்டாலங்குளத்தில் பிறந்த அழகுமுத்துக்கோன், எட்டயபுரம் பாளையத்தின் தளபதியாக விளங்கினார்.
ஆங்கிலேயர்களுக்கு வரி செலுத்த மறுத்து, அடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய முதல் தலைமுறை தியாகிகளில் அவர் முக்கியமானவர்.
1759ஆம் ஆண்டு நடுக்காட்டுச் சீமையில் வைத்து ஆங்கிலேயர்களால் 248 வீரர்களுடன் பீரங்கி முன் நிறுத்தி சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆண்டுதோறும் ஜூலை 11ஆம் தேதி தமிழக அரசின் சார்பில் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து முதன்முதலாக குரல் கொடுத்த வீரர்களில் ஒருவரான மாவீரர் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் விழா இன்று சென்னை எழும்பூரில் அரசு மரியாதையுடன் கொண்டாடப்பட்டது.
எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ராஜீவ் ஆகியோர் நேரில் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அவர்களுடன் அரசு அதிகாரிகள், யாதவ சமுதாயப் பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், வீரத்தின் அடையாளமாக திகழ்ந்த அழகுமுத்துக்கோனின் தியாகம் இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
அவரது வாழ்க்கை வரலாறு பள்ளி பாடத்திட்டங்களில் இடம்பெற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்டார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் ராஜீவ் பேசுகையில், நாட்டின் விடுதலைக்காக உயிர் துறந்த மாவீரர்களை நினைவுகூர்வது நம் ஒவ்வொருவரின் கடமை.
அழகுமுத்துக்கோனின் பெயரில் மணிமண்டபம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b