Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 ஜூலை (ஹி.ச)
காவிரி டெல்டா மாவட்டங்களை உடனடியாக வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்று எம். எச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், காவிரி நீர் உரிய அளவில் தமிழகத்திற்கு கிடைக்காததாலும் குறுவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்பட வேண்டிய மேட்டூர் அணை போதிய நீரிருப்பு இல்லாததால் திறக்கப்படாதது டெல்டா விவசாயத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆறு லட்சம் ஏக்கருக்கும் அதிகமாக நடைபெற்ற குறுவை சாகுபடி, இந்த ஆண்டு கடுமையாக குறைந்துள்ளதாகவும், தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் சாகுபடி பரப்பளவு கணிசமாக சரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகளும் மின்வெட்டு, குறைந்த மின்னழுத்தம் மற்றும் நீர்மட்ட சரிவு காரணமாக கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறியுள்ளார்.
குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டதால் விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்பட்டு, கிராமப்புற பொருளாதாரம் நெருக்கடியை சந்தித்துள்ளதாகவும், கால்நடை வளர்ப்போரும் தீவனப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
எனவே, காவிரி டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, குறுவை சாகுபடி செய்ய முடியாத அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.15,000 நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விதைப்பு அல்லது நடவு மேற்கொள்ள இயலாமை தொடர்பான இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
மேலும், சம்பா சாகுபடியை பாதுகாக்க சிறப்பு தொகுப்பு திட்டத்தை அறிவித்து, மானிய விலையில் விதைகள், உரங்கள், டீசல் உள்ளிட்ட உள்ளீடுகளை வழங்கவும், நீண்டகாலமாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை பெற்றுத் தருவதற்காக தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்றும், காவிரி டெல்டா விவசாயத்தை பாதுகாப்பது என்பது தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கையாகும் என்றும் ஜவாஹிருல்லா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ