சினிமா மூலம் பிரபலமாகி ஆட்சியைப் பிடித்தவர் விஜய் – எடப்பாடி பழனிச்சாமி
சேலம், 12 ஜூலை (ஹி.ச.) தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதற்கான காரணங்கள் குறித்து மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நி
இபிஎஸ்


சேலம், 12 ஜூலை (ஹி.ச.)

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அதற்கான காரணங்கள் குறித்து மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் உள்ள மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் பாலு உள்ளிட்ட மாநில, மாவட்ட, பகுதி, வட்ட மற்றும் வார்டு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி,

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றி பெற்றதால் தலைகால் புரியாமல் ஆடக்கூடாது. தோல்வியடைந்தால் துவண்டு விடும் இயக்கம் அதிமுக அல்ல என்றார்.

மேலும், கரூரில் முதலமைச்சர் விஜய், திமுகவும் அதிமுகவும் களவாணிகள் என்று பேசியுள்ளார். ஆனால், அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களை முதலமைச்சர் விஜய்தான் களவாடியுள்ளார் என்று விமர்சித்தார்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதாகவும், அந்த வழக்கை இரண்டு ஐ.ஜி.க்கள் மேற்பார்வையில் கண்காணித்து வருவதாகவும், மத்திய அரசும் இந்த வழக்கை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, சிவசேனா, மம்தா பானர்ஜியின் கட்சிகளின் நிலை அனைவருக்கும் தெரியும். சினிமா மூலம் பிரபலமாகி ஆட்சியைப் பிடித்தவர் விஜய்.

இந்த ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

Hindusthan Samachar / GOKILA arumugam