Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஜூலை (ஹி.ச)
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி அருகே செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் குறித்து, திருமுருகன் காந்தி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
சாராயக்கடையை அகற்ற மாணவர்கள் போராடும் நிலை உருவாகியுள்ள நிலையில், அந்தக் கடையை பாதுகாக்க காவல்துறை களமிறங்கியுள்ளது.
மாணவர்கள் இத்தகைய போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பது வேதனைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில் அரியலூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக செயல்படாத உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி மற்றும் மருத்துவமனைகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு என்ன ஆனது என்றும், இந்தச் சம்பவத்துக்கு யார் பொறுப்பேற்பார்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ள திருமுருகன் காந்தி, மாணவர்களை போராட்டத்திற்கு தள்ளிய நிர்வாகம் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ