Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 13 ஜூலை (ஹி.ச.)
நவீன காலத்தில் தனிக்குடித்தனங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆந்திர மாநிலத்தில் 6 தலைமுறைகளாக 83 பேர் ஒற்றுமையுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் குர்லபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகப்பாவின் குடும்பத்தில்தான் இந்த அரிய நிகழ்வு நடைபெற்று வருகிறது.
இவரது குடும்பத்தில் தற்போது 83 உறுப்பினர்கள் உள்ளனர். வசதிக்காக அருகருகே உள்ள 4 வீடுகளில் அவர்கள் வசித்து வந்தாலும், அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
இந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் ஒரே சமையலறையில்தான் உணவு தயாரிக்கப்படுகிறது.
குடும்பத்தின் மருமகள்கள் அனைவரும் ஒற்றுமையுடன் சமையல் பணிகளைப் பகிர்ந்து செய்து வருகின்றனர். குடும்ப உறுப்பினர்களின் வயது மற்றும் திறமைக்கு ஏற்ப பொறுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன.
குடும்பத்தின் மூத்தவர்கள் நிர்வாக பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.
இளைஞர்கள் விவசாயம் மற்றும் தொழில் பணிகளில் ஈடுபட்டு குடும்ப வளர்ச்சிக்கு பங்களித்து வருகின்றனர்.
இந்தக் குடும்பத்திற்கு சொந்தமாக 120 ஏக்கர் விவசாய நிலமும், 4 பேருந்துகளும் உள்ளன.
இவற்றின் மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்தும் ஒரே பொதுக் கணக்கில் சேர்க்கப்பட்டு, குடும்பத்தின் தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பல தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் ஒரே குடும்பமாக இணைந்து வாழ்ந்து வரும் இவர்களின் ஒற்றுமை, சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் இந்த ஆந்திர குடும்பம் பலருக்கும் முன்மாதிரியாக திகழ்கிறது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA