Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஜூலை (ஹி.ச.)
நெடுஞ்சாலைத் துறையில் நடைபெறாத சாலைப் பணிகளுக்காக முன்கூட்டியே நிதி விடுவித்து கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக்-அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த மேல்முறையீட்டு மனுவை அவசரமாக நாளைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தலைமை நீதிபதி முன் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால், அந்த கோரிக்கையை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, வழக்கை நாளை விசாரிக்க இயலாது என்றும், நாளை மறுநாள் விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, சென்னை உயர்நீதிமன்றம் எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு நிபந்தனையுடன் இடைக்காலத் தடை விதித்திருந்தது. மேலும், அவர் ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்தே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
இதனால் இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை மீது அரசியல் மற்றும் சட்ட வட்டாரங்களில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P