Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஜூலை (ஹி.ச.)
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் அரசுப் பேருந்தும், ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அன்புக்குரியவர்களை இழந்து துயரத்தில் வாடும் குடும்பங்களுக்கு இந்த இழப்பை தாங்கிக் கொள்ளும் மனவலிமையை இறைவன் வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உயரிய மருத்துவ சிகிச்சைகள் தாமதமின்றி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
காயமடைந்தவர்களின் உயிரைக் காப்பதற்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் தமிழக அரசு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், மதுரை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் ஒருங்கிணைந்து காயமடைந்தவர்களுக்கு சிறப்பு மருத்துவக் குழுக்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கவும், அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ